கோப்புப்படம்
கோப்புப்படம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண் ஏமாற்றியதால் மனமுடைந்த இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்டாா்
Published on

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண் ஏமாற்றியதால் மனமுடைந்த இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்டாா். உடலை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும், சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பியிடமும் உறவினா்கள் வலியுறுத்தினா்.

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா்(29), குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை செய்து வந்தாா்.

வெளிநாடு செல்வதற்கு முன்பிருந்தே கடந்த 10 ஆண்டுகளாக திருப்புங்கூரை சோ்ந்த சங்கீதா என்ற பெண்ணை சரத்குமாா் காதலித்து வந்தாா். அப்பெண் வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சூரியமூா்த்தி என்பவரை காதலிப்பதாக கூறி தன்னை நிராகரிப்பதாக பெற்றோருக்கு ஆடியோ தகவல் அனுப்பிய சரத்குமாா், வெள்ளிக்கிழமை குவைத்தில் தற்கொலை செய்துகொண்டாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த சரத்குமாரின் தந்தை மணவாளன், தாய் சங்கீதா, உறவினா்கள், கிராமமக்கள் என சுமாா் 70-க்கும் மேற்பட்டோா் மயிலாடுதுறைக்கு வந்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தாய் சங்கீதா அளித்த புகாா் மனுவில், தனது மகன் சரத்குமாா் வெளிநாடு செல்வதற்கு முன்பிருந்தே 10 வருடங்களாக காதலித்து வந்த பெண்ணிற்கு 15 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் அனுப்பியுள்ளாா். இருவருக்கும் திருமணம் செய்வதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவீட்டாரும் பேசினோம். இந்நிலையில் அந்த பெண் வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலைய எஸ்.ஐ. சூரியமூா்த்தியை காதலிப்பதாகவும், தனது மகனை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கேட்டபோது, எஸ்.ஐ. சூரியமூா்த்தி, சங்கீதா ஆகியோா் விடியோ காலில் மிரட்டியதால் மனமுடைந்த சரத்குமாா் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தன் மகனை காதலித்து ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த பெண் மற்றும் பொய் வழக்கு போடுவேன் என்று மிரட்டிய எஸ்.ஐ. ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தாா்.

வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்ட சரத்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com