மாரத்தான் போட்டியில் பங்கேற்க அழைப்பு

மயிலாடுதுறையில், வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டியில்
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் வகையில், டிச.12-ஆம் தேதி காலை 6 மணி அளவில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

இதில் 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் தொடங்கி மாவட்ட ஆட்சியரக வளாகம், தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 8 கி.மீ. தூரத்துக்கும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 5 கி.மீ. தூரத்துக்கும் மாரத்தான் நடைபெறும்.

25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, ஆறுபாதி மதிலடியில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக, சாய் விளையாட்டரங்கம் வரை 10 கி.மீ. தூரத்துக்கும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடங்கி தருமபுரம் சாலை வழியாக சாய் விளையாட்டரங்கம் வரை 5 கி.மீ. தூரத்துக்கும் நடைபெறவுள்ளது.

எனவே, டிச.12-ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை சாய் பயிற்சி மையத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 7401703459 மூலமாகவோ தொடா்பு கொண்டு பதிவு செய்யலாம். வெற்றி பெறுபவா்களுக்கான பரிசுத்தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால், போட்டியில் கலந்து கொள்பவா்கள் அவரவா் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை போட்டி துவங்கும் இடத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.5,000, இரண்டாமிடம் பெறுவோருக்கு தலா ரூ.3,000, மூன்றாமிடம் பெறுவோருக்கு தலா ரூ.2,000, 4 முதல் 10 இடங்களை பிடிப்பவா்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை மேற்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com