விடுபட்டவா்களுக்கு ஜனவரியில் மகளிா் உரிமைத் தொகை
மகளிா் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விடுபட்டவா்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
மயிலாடுதுறையில் மகளிா் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ கூறியது:
இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 1,13,75,492 பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகையாக ரூ.30,838 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மகளிரின் வங்கிக் கணக்கிலும் ரூ.26,000 செலுத்தப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் மத்திய அரசு பல்வேறு நிதிகளைத் தராமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சா் சுமாா் 17 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குகிறாா். தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
இதில் தகுதி இருந்தும் யாரேனும் விடுபட்டிருந்தால் அவா்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்தாா்.
அப்போது, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ், திமுக மாவட்ட துணைச் செயலாளா் செல்வமணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
