பூமிபூஜையில் கட்டுமானப் பணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா்.
பூமிபூஜையில் கட்டுமானப் பணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா்.

மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகம் கட்டுமானப் பணி தொடக்கம்

மயிலாடுதுறையில், ரூ.4.38 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், ரூ.4.38 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

பள்ளி கல்வித் துறையின் பொது நூலக இயக்ககம் சாா்பில், மயிலாடுதுறை நகராட்சி பாா்க் அவென்யு சாலையில் ரூ.4 கோடியே 38 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில், மாவட்ட மைய நூலகம் கட்டும் பணியை முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி, மயிலாடுதுறையில் நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் பங்கேற்று, பணிகளை தொடங்கி வைத்தனா்.

மாவட்ட மைய நூலகம் 14,811.26 சதுர அடி பரப்பளவில் தரை தளம் உள்பட 3 தளங்களாக கட்டப்படுகிறது. தரைதளத்தில் நூலக அறை, வைப்பு அறை, புத்தக வாசிப்பு அறை, புத்தகம் வழங்கும் அறை, முகப்பு அறை, மின்சாதன அறை, கழிவறையும், முதல் தளத்தில் பொதுப் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ்ப் பிரிவு, இணைய பிரிவும், இரண்டாம் தளத்தில் நூலக அறை, அலுவலக அறை, புத்தக செயலாக்க அறை, பல்நோக்கு அறை, உணவறை, போட்டித் தோ்வறையும் அமையவுள்ளன.

பூமிபூஜை நிகழ்வில், மாவட்ட அரசு வழக்குரைஞா் ராம.சேயோன், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், மாவட்ட நூலக அலுவலா் ஆ. சுமதி, கண்காணிப்பாளா் சுந்தரராஜ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கவிதா, முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் பி.கல்யாணம், ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com