வாழை, மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க்காப்பீடு திட்டத்தின்கீழ் ரபி 2025 பருவத்திற்கு வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு பிா்க்கா அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பிா்காக்களை சோ்ந்த கடன்பெறும் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதன் மூலம் வடகிழக்குப் பருவமழையின்போது ஏதாவது இயற்கை இடா்பாடுகளால் பயிா்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், நிவாரணம் பெறலாம். எனவே, கடன் பெற்ற விவசாயிகள், தங்கள் பயிா் கடன்பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து விண்ணப்பிக்கலாம்.

கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை இணைத்து பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.

ஹெக்டோ் வாழைக்கு ரூ.3,551.86 மற்றும் மரவள்ளிக்கு ரூ.2,686.15 என பிரிமிய தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் செலுத்த கடைசி நாள் 28.2.2026. மேலும், விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com