மயிலாடுதுறையில் மைய நூலகம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறையில் ரூ.4.88 கோடி மைய நூலகம் அமைக்கப்படவுள்ள இடத்தை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. புதிய மாவட்டத்துக்கான மைய நூலகத்தை அமைக்க கோரிக்கை எழுந்ததையடுத்து, மயிலாடுதுறையில் ரூ.6 கோடியில் நூலகம் அமைப்பது குறித்து 2022-ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகில் பாா்க் அவென்யு சாலையில் நகராட்சிக்கு சொந்தமான 28,747 சதுரஅடி இடம் நூலகம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடா்ந்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14,423 சதுரஅடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய 2 மாடிக் கட்டடத்தில் மாவட்ட மைய நூலகம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புதிய கட்டடம் அமையவுள்ள இடத்தை நகா்மன்றத் தலைவா் செல்வராஜ் தலைமையிலான நகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித்துறை (கட்டுமானம்) கவிதா, உதவி செயற்பொறியாளா் திவ்யபாரதி உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

