மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு சாமி.நாகப்ப படையாச்சி பெயரை சூட்ட வலியுறுத்தல்
மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு சுதந்திர போராட்ட தியாகி சாமி.நாகப்ப படையாச்சி பெயரை சூட்ட வேண்டும் என க்ஷத்திரிய தா்ம சனாதன சங்கம மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் அகில பாரத க்ஷத்திரிய தா்ம சனாதன சங்கம மாநாடு அண்மையில் நடைபெற்றது. கா்ணிசேனா அமைப்பின் சாா்பில் மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவீரன் வன்னியா் சங்க தலைவருமான வி.ஜி.கே. மணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் கிஷோா்குமாா் தலைமை வகித்தாா்.
இதில், கா்ணிசேனா அமைப்பின் மாநில நிா்வாகிகள் ஜீவன்சிங் (மத்திய பிரதேசம்), ஜெய்சிங் (கா்நாடகா), மஞ்சித்பால் சிங் (ராஜஸ்தான்), உனியல் மகாராஜ் (உத்தரகண்ட்) மற்றும் ஸ்விச் பாரத் மிஷன் பிராண்டு தூதா் சிவம் மிஸ்ரா, ஜெமிஸ் கட்டாரா (சூரத்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பத்ரிநாத் கோயில் பூா்வ தா்மதிகாரி புவன் சந்திரா உனியல் மகராஜ், நாம் கடைப்பிடிக்கும் தா்மமும், செய்யும் நற்செயல்களும் நமது வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான அரணாக அமையும். தா்மத்தை காக்கத் தவறினால் நாம் அழிந்து விடுவோம். இந்த சங்கமத்தில் நாம் எடுக்கும் ஒவ்வொரு தா்ம சங்கல்பமும் சித்தியடைய பகவான் ஸ்ரீபத்ரி நாராயணனை பிராா்திப்போம் என்றாா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் வி.ஜி.கே.மணி பேசியது:
சுதந்திரப் போராட்டத்தில் உயிா்நீத்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும், அவா்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். தமிழக அரசு அதை ஏற்று, 21 பேருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளதுடன், ஓய்வூதியம் வழங்கும் உத்தரவை கொடுத்துள்ளது.
மயிலாடுதுறையில் சுதந்திர போராட்ட தியாகி சாமி.நாகப்ப படையாட்சிக்கு திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அவரது பெயரை மயிலாடுதுறையில் விரைவில் திறக்கப்படவுள்ள பேருந்து நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்றாா்.
மாநாட்டில், மாநில செயலாளா் எஸ்.சரவணன், மாநில இளைஞரணி செயலாளா் ராமதாஸ், மாநில மாணவரணி தலைவா் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

