நாகை மாவட்டத்தில், மாவட்டத் தொழில் மைய நிதி உதவியுடன் செயல்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்ட மானியத்துடன், வங்கிக் கடன் பெற்று செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். டி.ஐ.ஐ.சி வங்கி நிதி உதவியுடன் கீழையூரை அடுத்த பிரதாபராமபுரத்தில் இயங்கும், நிலக்கரி சாம்பல் மற்றும் கல்குவாரி துகள்கள், சிமெண்ட் கலவை ஆகியவற்றைக் கொண்டு கல் தயாரிக்கும் நிறுவனம், இந்தியன் வங்கி நிதி உதவியுடன் நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் செயல்படும் மசாலா பொருள்கள் தயாரிப்பு தொழிற்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, சிட்டி யூனியன் வங்கி நிதி உதவியுடன் புத்தூர் அருகே செயல்படும் நான்கு சக்கர வீல் அலைன்மென்ட் நிறுவனம், இந்தியன் வங்கி நிதி உதவியுடன் வடக்குப் பால்பண்ணைச்சேரியில் இயங்கும் பி.வி.சி பைப்புகள் தயாரிப்புத் தொழிற்சாலை ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுகளின் போது, தொழிலில் புதிய உத்திகளைக் கையாண்டு அபிவிருத்தி காண தொழில் முனைவோர் முனைப்புடன் இருக்க வேண்டும் எனவும், மின்வெட்டு கால உற்பத்தி தடையைத் தவிர்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் மானிய விலையில் ஜெனரேட்டர் வாங்கும் திட்டத்தை தேவையான தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தினார். மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ப. தாமோதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








