முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 31-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு அதிமுக மற்றும் அமமுக சார்பில் திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமுக சார்பில் நாகை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைதி பேரணி, புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சரும், கட்சியின் நாகை மாவட்ட அவைத் தலைவருமான ஆர். ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அமமுக: அமமுக சார்பில், கட்சியின் நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில், வ.உ.சி. நகரில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். இதில், நகர்மன்ற முன்னாள் தலைவர் மஞ்சுளா உள்ளிட்ட அமமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
சீர்காழியில்...
சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தலைமையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய அமைதி பேரணி முக்கிய வீதிகள் வழியாக ஈசானிய தெருவில் நிறைவடைந்தது. பின்னர், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ம. சக்தி, நகர செயலர் அ. பக்ரிசாமி, மாவட்ட பொருளாளர் வா. செல்லையன், ஒன்றியச் செயலர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
கொள்ளிடத்தில்...
இதேபோல், கொள்ளிடத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நினைவு தின நிகழ்ச்சிக்கு கொள்ளிடம் ஒன்றியச் செயலர் நற்குணன் தலைமை வகித்தார். இதில், மீனவரணிச் செயலர் நாகரத்தினம், தொகுதி இணைச் செயலர் ராஜேந்திரன், ஒன்றிய பேரவைச் செயலர் கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செம்பனார்கோவிலில்...
செம்பனார்கோவில் கடைவீதியிலிருந்து காளகஸ்திநாதபுரம் வரை பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அப்பகுதியிலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் விஜயபாலன், வடக்கு ஒன்றியச் செயலர் சுந்தர்ராஜன், கீழையூர் கூட்டுறவு சங்கத் தலைவர் கபடிபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குத்தாலத்தில்...
குத்தாலம் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்துக்கு ஒன்றியச் செயலர் சி. ராஜேந்திரன், நகர செயலர் எம்.சி. பாலு ஆகியோர் தலைமையில் மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், மங்கநல்லூர் கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்துக்கு நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவரும் தெற்கு ஒன்றியச் செயலருமான என். தமிழரசன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ. நடராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








