வெள்ளத்தை எதிர்கொண்ட எங்களை புயல் சூறையாடிவிட்டது: பாதுகாப்பான வீடுகளுக்கு ஏங்கும் மக்கள் 

வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை எதிர்கொண்ட தங்களை, கஜா புயல் சூறையாடிவிட்டதாக
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை எதிர்கொண்ட தங்களை, கஜா புயல் சூறையாடிவிட்டதாக வண்டல், குண்டூரான்வெளி கிராம மக்கள் ஏக்கத்துடன் தெரிவித்துள்ளனர். 
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சிக்குள்பட்டது வண்டல், குண்டூரான்வெளி கிராமங்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும், வெள்ளம் சூழ்ந்து, பாதுகாப்பு மையங்களைத் திறக்கும் முதல் கிராமங்களாக இக்கிராமங்கள் திகழ்கின்றன.  தவிர, படகுகளில் பயணம், நிவாரண உதவி, ஆறுதல் கூற அரசியல் தலைவர்களின் பயணம் என பரபரப்பாகி, ஊடகங்களின் பார்வையை ஈர்க்கும்.
தீவு போல காணப்படும் இந்த கிராமங்களில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்ட இப்பகுதி சிறார், படிப்புக்கும், பிற தேவைகளுக்கும் வெளியூர்களுக்கே சென்றாக வேண்டும். பாதுகாப்புமிக்க சாலை, இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள ஏற்ற வகையிலான வீடுகள், பாதுகாப்பான கட்டடங்கள் ஆகியைவே இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இந்த கிராமங்களுக்காக அடைப்பாற்றின் குறுக்கே கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  அவரிக்காடு- வண்டல் இணைப்புப் பால கட்டுமானப் பணி இன்னமும் முடிவடையவில்லை.
இயற்கை பேரிடர் காலத்தில் இவர்கள் தஞ்சமடைய ஏதுவாக இருப்பது 2 பள்ளிக் கட்டடங்கள் மட்டுமே. அதிலும், ஒரு கட்டடத்தின் ஓடுகள் கஜா புயலின் சீற்றத்தில் பறந்துவிட்டன. மற்றொன்று அதன் உறுதித்தன்மையை இழந்துவிட்டது. புயலின் சீற்றத்தால், சுமார் 15 கான்கிரீட் வீடுகளில் தஞ்சம் புகுந்து உயிருக்குச் சேதமின்றி தப்பியுள்ளனர், இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (60) கூறுகையில், நவ. 15-ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கிய புயல், சுழன்று சுழன்று வீசியது. மின்கம்பங்கள் விழுந்ததும் மனைவி, பிள்ளைகள் எதிர்வீட்டில் தஞ்சம்புகுந்தனர். நான் மட்டும் ஆடு, மாடுகளோடு எனது வீட்டிலேயே இருந்தேன். எதிர்பாராத விதமாக சிமென்ட் அட்டையில் போடப்பட்ட வீட்டின் மேற்கூரை பறந்தது. ஓடவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் நெல் கொட்டும் பத்தாயத்தைப் பிடித்துக் கொண்டே வெகுநேரமாக நின்றேன். இடையில் புயலின் வேகம் குறைந்தபோது, படுத்துக் கொண்டே நகர்ந்து, சாலையைக் கடந்து எதிர்வீட்டில் நுழைந்து உயிருக்கு பாதிப்பின்றி தப்பினேன் என்றார் அவர்.
தற்போது, அரசு, தனியார் அமைப்பினர் அளிக்கும் நிவாரணப் பொருள்கள் படகுகளின் மூலம் இப்பகுதியைச் சென்றடைகின்றன. பருவ மழையை மட்டுமே எதிர்கொண்ட இப்பகுதி மக்களுக்கு, கஜா புயலின் கோரத்தாண்டவம் மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பான கட்டடங்கள், கான்கிரீட் வீடுகள் ஆகியவற்றை கட்டித்தர இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com