கிராமங்களில் மீண்டும் மவுசு பெறும் உலக்கைகள்!

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நெல் குத்தும் உலக்கையின் பயன்பாடு காலப்போக்கில்
Updated on
1 min read

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நெல் குத்தும் உலக்கையின் பயன்பாடு காலப்போக்கில் மறைந்துவிட்ட நிலையில், தற்போது கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு உலக்கை இன்றியமையாததாகிறது. இதனால், கிராமங்களில் அண்மைக்காலமாக உலக்கை வியாபாரத்துக்கு மவுசு பெருகி வருகிறது.
இயந்திரங்களின் பயன்பாடுகள் அதிகமாகி வருவதற்கு முந்தையக்  காலம் வரை நெல்லைக் குத்தி அரிசி எடுக்க உரல் உலக்கைகளின் பயன்பாடு மிகவும் அவசியமானதாக இருந்து வந்தது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அதிநவீன வளர்ச்சியின் காரணமாக நெல் அரைக்கும் அரிசி ஆலைகள், நவீன அரிசி ஆலைகளில் நெல் அரைக்கும் முறைகள் வந்தன.அத்துடன், நெல்லை அரைத்து அரிசி எடுக்கும் முறைகளும் குறைந்து, கடைகளில் ஆயத்த நிலையில் விற்கப்படும் பை அரிசிகளின் பயன்பாடு அதிகரித்தது. இதனால், உரல் உலக்கைகளின் பயன்பாடு பல இடங்களில் அதன் அடையாளத்தை இழந்து வழக்கொழிந்துபோனது.
இந்நிலையில், கிராமப்புறங்களில் நெல் குத்தும் முறைக்கு பயன்படாவிட்டாலும், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், நம்பிக்கை சார்ந்த கலாசார சடங்குகளுக்கு உலக்கையின் பயன்பாடு அத்தியாவசியமாகிறது. வயதுக்கு வரும் பெண்களுக்கு சடங்கு செய்வது, மாட்டுப் பொங்கல், இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகள் போன்றவைகளுக்கு உலக்கைகள்
இன்றைக்கும் தேவைப்படுகின்றன. சில சடங்குகளுக்கு நெல்லைக் குத்த உரல், உலக்கை இரண்டும்கூட தேவைப்படுகின்றன.
கடந்த ஆண்டில் கஜா புயல் ஏற்பட்ட நேரத்தில் பல வீடுகளில் வைத்திருந்த உலக்கைகள் சேதமடைந்தன. இதனால், மர உலக்கைகளை செய்து விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளவர்களுக்கு இப்போது வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மோட்டார் சைக்கிள்கள் மூலம் கிராமங்களுக்கு விற்பனைக்கு வரும் மர உலக்கைகளை வாங்குவதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் உலக்கை வியாபாரத்துக்கு வந்த கடலூர் மாவட்டம், பண்ருட்டி, திருவாதிகை பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் (58) கூறியது: எங்கள் அப்பா காலத்தில் இருந்து பால மரத்தில் உலக்கைகள் செய்து விற்பனை செய்வதுதான் தொழில். முன்பெல்லாம் கோயில் திருவிழாக்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். எட்டுக்குடி முருகன் கோயிலில் அதிகமாக விற்பனையாகும். கஜா புயலுக்கு பிறகு இப்பகுதியில் வீடுகளில் இருந்த உலக்கைகள் கூட சேதமடைந்து விட்டதை அறிந்தோம்.  இதனால் கிராமப்புறங்களுக்குச் சென்று விற்பனை செய்யத் தொடங்கினோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கிராமங்களில் பெண்கள் உலக்கைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெல் குத்த மட்டுமல்லாமல் சடங்குகள் சார்ந்த தேவைக்காகவும் உலக்கை அதிகளவில் விற்பனையாகிறது என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com