தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜிநாமா
By DIN | Published On : 01st April 2019 07:49 AM | Last Updated : 01st April 2019 09:09 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பண்ணை சொக்கலிங்கம், அந்த பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்தார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக, நாகை வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பை கடந்த வியாழக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டார்.
இந்நிலையில், பண்ணை சொக்கலிங்கம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு ஓ.வி.எம். கிருஷ்ணமூர்த்தி, ஜெயபால், ஜி. சரத்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வம் தலைமையில் மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தீர்மானங்கள்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைக்க தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது, மக்களவைத் தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடாத நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு கண்டனம் தெரிவிப்பது, அவரை மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றக் கோரி தலைமைக்கு வேண்டுகோள் விடுப்பது.
தேர்தல் மேலிடப் பார்வையாளரை நியமித்து, தேர்தல் பணிகளை கண்காணிக்க கோருவது, முன்னாள் மாவட்டத் தலைவர் பண்ணை சொக்கலிங்கத்தின் தேர்தல் பொறுப்பு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இருந்து, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், அப்பொறுப்பை அவர் ராஜிநாமா செய்யக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து பண்ணை சொக்கலிங்கம் ராஜிநாமா செய்தார்.
இக்கூட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பண்ணை சொக்கலிங்கம், இராம.சிதம்பரம், முன்னாள் நகர தலைவர் செல்வம், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கே.கமலநாதன், மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் ரெங்கநாதன், பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலச் செயலாளர் ஆர்.கே.கனகசபை, கொள்ளிடம் அசோகன், வேல்முருகன், ராஜதுரை, ராஜசேகர், சிவப்பிரகாசம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.