சிதம்பரம், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளுக்கான காவல் பார்வையாளராக எஸ்.என்.சித்தராமப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை மக்களைத் தொகுதிகளுக்கு காவல் பார்வையாளராக ஹேமந்த் கல்சன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் சனிக்கிழமை நள்ளிரவு அரியலூர் சுற்றுலா மாளிகையில் துப்பாக்கியால் 9 முறை வானத்தை நோக்கிச் சுட்டதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்திருந்தார். அது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் பார்வையாளர் பணியில் இருந்து ஹேமந்த் கல்சன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பெரம்பலூர், கடலூர் மக்களவைத் தொகுதிகளுக்கான காவல் பார்வையாளர் தேவராஜூவுக்கு கூடுதல் பொறுப்பாக சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை தொகுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.
தற்போது சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை தொகுதிகளுக்கு புதிய காவல் பார்வையாளராக எஸ்.என். சித்தராமப்பா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.