சீர்காழி அருகே மேலப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வெள்ளடைநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொதிசோறு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெயிலில் வெம்மையாலும், தண்ணீரின் வேட்கையுடனும், பசியாலும் வருந்தி வந்த சுந்தரருக்கும், அவருடன் கூடிய அடியவர்களுக்கும், எதிர்கொண்டு வேதியராய் வேடம் பூண்டு பெரிய சுகமான பந்தல் அமைத்து, அதில் அவர்களைக் களைப்பாறச் செய்து அவர்களுக்கு மணமுள்ள சுவையான குளிர்ந்த நீரையும், பசி தீர பொதிசோறும் அருந்தினர் என்ற சம்பவம் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மேலப்பாளையம் கிராமத்தில் வெள்ளடைநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொதிசோறு வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவெள்ளடைநாதருக்கும், சுந்தரருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல், கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் மும்மாரி அம்மன் கோயிலில் சிறப்பு யாகமும், யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
சித்திரை பௌர்ணமியையொட்டி, கீரங்குடியில் உள்ள குடவரசியம்மன் கோயில், மாங்கணாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.