புயல் எச்சரிக்கை: பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்படும் படகுகள்
By DIN | Published On : 26th April 2019 05:22 AM | Last Updated : 26th April 2019 05:22 AM | அ+அ அ- |

வேதாரண்யம் பகுதியில் புயல் தாக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் வியாழக்கிழமைஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர்15 -ஆம் தேதி வீசிய கஜா புயலின் பாதிப்பிலிருந்து வேதாரண்யம் பகுதி மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், தற்போது, வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயல் வேதாரண்யம் பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால், வேதாரண்யம் பகுதி மக்களிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வானிலைத் தகவல்களை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கையாக வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வருகின்றனர். ஏற்கெனவே மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால், ஆழ்கடலுக்குச் செல்லும் விசைப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு பழுது நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கடலில் குறைந்த தொலைவுக்குச் சென்று மீன் பிடித்து வரும் கண்ணாடியிழைப் படகுகள் பயன்பாட்டில் உள்ளதால், அவற்றை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
தேநீர்க் கடையில் வானிலை அறிக்கைஇதற்கிடையில், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கடை வீதியில் உள்ள தேநீர்க் கடை ஒன்றில் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந. செல்வகுமார் வழக்கமாக எழுதி வைக்கும், வானிலை அறிக்கையை மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்தோடு கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1-ஆம் தேதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.