வேதாரண்யம் பகுதியில் வயிற்றுப்போக்கு நோய்: 5 சிறுவர்கள் உள்பட 25 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கிராம மக்களுக்கு கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு இருந்து வரும் நிலையில்
Updated on
1 min read


நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கிராம மக்களுக்கு கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு இருந்து வரும் நிலையில், 5 சிறுவர்கள் உள்பட 25 பேர் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மருதூர், மறைஞாயநல்லூர் பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட இடங்களில் வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்பு கடந்த சில நாள்களாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மறைஞாயநல்லூரை சேர்ந்த கமலி (6), பானுமதி(70), அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்த பேரரசு (2), வேதாரண்யம் பிரியதர்ஷிணி (19), கருப்பம்புலம் வைரக்கண்ணு (70), ஆயக்காரன்புலம் சிவசங்கரி (26) என 5 சிறுவர்கள், 16 பெண்கள் உள்பட 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சுகாதார நிலையங்களிலும் வெளிநோயாளிகளாக சிலர் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தடைபட்டுள்ள குடிநீர் காரணமா?:
வாந்தி, வயிற்றுப் போக்கு பாதிப்புக்கு குடிநீர் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கடந்த சில நாள்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் விநியோக குழாய் பாதையில் மருதூர் தெற்கு இரட்டைக்கடை வீதி பகுதியில் பாலம் கட்டும் பணியால் பாதிப்பு ஏற்பட்டு, போதிய அழுத்தத்தில் குடிநீரை மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஏற்றுவது தடைபட்டது.
ஏற்கெனவே பிடித்து வைத்திருந்த தண்ணீர், மாற்று ஆதாரக் குடிநீரை பருகியதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கிராமங்களில் கடந்த மார்ச் மாதத்திலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதும், கொள்ளிடம் குடிநீர் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவியதுமே இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையிலும் தண்ணீர் இல்லை:
அதேவேளையில், வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக கழிவறை பயன்பாட்டுக்கு போதிய தண்ணீர் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com