அஹிம்சை நெடும்பயணம் மேற்கொண்டுள்ள, ஜைன ஸ்வேதாம்பர் தேராபந்த் அறச் சங்கத்தின் பதினோராவது தலைமை அடிகள் ஆச்சார்ய ஸ்ரீமஹாஷ்ரமண் சுவாமிகள், சீர்காழிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.6) வருகை தருகிறார்.
இதுகுறித்து, ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தேராபந்த் சபாவின் சீர்காழி கிளைத் தலைவர் கியான்சந்த் வெளியிட்ட அறிக்கை:
ராஜஸ்தான் மாநிலம் ஸர்தார்ஷஹர் கிராமத்தில் 1962-ஆம் ஆண்டு பிறந்தவர் ஆச்சார்ய மஹாஷ்ரமண் சுவாமிகள். இவர் தனது 11-ஆவது வயதில் துறவறம் பூண்டார்.
ஆச்சார்ய ஸ்ரீ மஹாஷ்ரமண் சுவாமிகள் நல்லெண்ணம், நன்னெறியைப் பரப்புதல், போதை ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, அஹிம்சை நெடும் பயணமாக 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுதில்லி செங்கோட்டையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார். இந்தியா மட்டுமன்றி பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். 110 சீடர்கள் உடன் செல்கின்றனர்.
இவர் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 15ஆயிரம் கி. மீ. தொலைவு பயணித்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை சீர்காழிக்கு வருகை தருகிறார். ஆச்சார்ய ஸ்ரீமஹாஷ்ரமண் சுவாமிக்கு சேந்தங்குடி முதல் சீர்காழி தேர் வடக்கு வீதி வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, சம்பத் ராஜ்கியான்சந்த் இல்லத்துக்கு விஜயம் செய்யும் ஆச்சார்யார், அன்றைய தினம் காலை 10 மணி முதல் 12 மணி வரை சீர்காழி வைரவன்கோடியில் உள்ள ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் தேராபந்த் சபாவில் பொதுமக்களுக்கு அருளாசி வழங்குகிறார். இதில் ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் பங்கேற்று, அருளாசி பெறலாம் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.