கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம், காமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏற்கெனவே சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம், காமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, அரசு ஊழியர் சங்கம் சார்பில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான தென்னை, நெல்லி, புளி, பலா மற்றும் எலுமிச்சை மரக்கன்றுகள்
வழங்கப்பட்டன. அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம். செளந்தரராஜன், சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் ப. அந்துவன் சேரல், மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், பொருளாளர் ப. ராணி, நாகை வட்டச் செயலாளர் எம். தமிழ்வாணன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சு. சிவகுமார் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை வழங்கினர்.