குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் மழை வேண்டி வழிபாடு
By DIN | Published On : 19th May 2019 09:06 AM | Last Updated : 19th May 2019 09:06 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை குதம்பைச் சித்தர் ஜீவ சமாதியில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் குதம்பைச் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இங்கு, மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் விசாக நட்சத்திர வழிபாடு நடைபெற்றது.
ஓதுவார் சிவக்குமார் தலைமையில் தேவாரத்தில் உள்ள மேகராகக்குறிச்சி பண்ணில் உள்ள திருக்கழுமலம், திருவையாறு, திருமுதுகுன்றம், திருவீழிமிழலை, திருவேகம்பம், திருப்பறியலூர் திருவீரட்டம், திருப்பராய்த்துறை மற்றும் திருப்பங்கூர் கோயில்களில் சுந்தரர் பாடிய மழை வேண்டல் பதிகங்களை ஓதி மழை பெய்ய வேண்டி, கூட்டு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து, குதம்பைச் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன், மத்திய அரசு வழக்குரைஞரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. ராஜேந்திரன், பாஜக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராம.சேயோன் செய்திருந்தார்.