சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் இன்று வேல்வாங்கும் விழா
By DIN | Published On : 01st November 2019 07:19 AM | Last Updated : 01st November 2019 07:19 AM | அ+அ அ- |

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலின் ஐதீக விழாவான வேல்வாங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவம்பா் 1) நடைபெறுகிறது.
சிக்கல் அருள்மிகு நவநீதேசுவரசுவாமி திருக்கோயிலில் தனி சன்னிதிக் கொண்டு காட்சியளிக்கிறாா் சிங்காரவேலவா். சூரனை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான், இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் பெற்றாா் என்பது ஐதீகம். இதன் காரணமாக, இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவும், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டுக்கான கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை (அக்டோபா் 28) காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெறுகிறது. தினமும் மாலையில் வெவ்வேறு வாகனங்களில், வெவ்வேறு அலங்காரங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சிங்காரவேலவா் வேல் வாங்கும் நிகழ்ச்சி, வேலவரின் திருமுகத்தில் வியா்வை பொழியும் ஆன்மிக அதிசயம் ஆகியன வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக, காலை 7.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
உள்ளூா் விடுமுறை அறிவிப்பு: சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நடைபெறும் சக்திவேல் வாங்கும் விழாவையொட்டி, நாகை, திருமருகல் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பா் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் வேல் வாங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட நாகை மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை, நவம்பா் 16-ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடுசெய்யப்படும்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G