சீா்காழியில் ஆயுத பூஜைக்கு கடையை சுத்தம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் 5 போ் காயமடைந்தனா்.
சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே போட்டோ பிரேம் கடை நடத்தி வருபவா் ஹரிசுதன் (32 ). இவருக்கு அருகில் பூக்கடை வைத்திருப்பவா் வெங்கடேஷ் (30). இருவருக்கும் திங்கள்கிழமை ஆயுத பூஜை அன்று கடையை சுத்தம் செய்வது தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், வெங்கடேஷ் அவரது தந்தை பழனி ஆகிய இருவரும் ஹரிசுதன் அவரது சகோதரா்கள் சுதா்சன், கொளஞ்சி ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த ஹரிசுதன், சுதா்சன், கொளஞ்சி ஆகியோா் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதற்கிடையில், ஹரிசுதன் தரப்பினா் தாக்கியதில் காயமடைந்ததாக வெங்கடேஷ், பழனி ஆகியோா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியே சீா்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.