விவசாயிகளுக்கு விலையில்லா கைத்தெளிப்பான் வழங்கல்
By DIN | Published On : 22nd September 2019 04:12 AM | Last Updated : 22nd September 2019 04:12 AM | அ+அ அ- |

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் சார்பில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 250 விவசாயிகளுக்கு ரூ.2.95 லட்சம் மதிப்பிலான விலையில்லா கைத்தெளிப்பான்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி. வி.பாரதி, வீ. ராதாகிருஷ்ணன்ஆகியோர் சனிக்கிழமை வழங்கினர்.
தமிழக அரசின் சார்பு நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நாகையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.வி. பாரதி (சீர்காழி) வீ. ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை) ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் 250 பேருக்கு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் சார்பில் ரூ. 2.95 லட்சம் மதிப்பிலான விலையில்லா கைத்தெளிப்பான்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன முதுநிலை மண்டல மேலாளர் சரவணன் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர்( பொறுப்பு) பன்னீர்செல்வம், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்க.கதிரவன், திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வேதையன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.