

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த குருமானங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன்- மாரியம்மாள் தம்பதி. விவசாய கூலி வேலைகளை செய்து வரும் இவர்களில் கணேசன் மாற்றுத்திறனாளி ஆவார். கரோனா ஊரடங்கால் வேலைவாய்பு இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இத்தம்பதியின் இளையமகன் மாரிமுத்து அருகில் உள்ள வைத்தியநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்போதைய கரோனா ஊரடங்கு விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற நினைத்த மாணவர் மாரிமுத்து தன் ஓவிய திறமையை வளர்க்க முடிவு செய்தார்.
ஆனால் ஓவியம் வரைவதற்கான அட்டைகளோ வண்ணம் தீட்டும் நவீன உபகரணங்களோ வாங்கும் நிலையில் தனது பெற்றோர் இல்லை என்பதை உணர்ந்த மாரிமுத்து தனது ஓவியதிறனை வெளிபடுத்த மாற்று வழியை சிந்தித்துள்ளார். அதன்படி தன்னிடம் உள்ள பென்சில், பழைய கலர் பென்சில்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் இயற்கையாய் கிடைக்கும் வண்ணங்களை மட்டுமே பயன்படுத்தி தன் வீட்டு சுவற்றை தனக்கான ஓவிய களமாக மாற்றியுள்ளார். மூன்றடி உயரம் மட்டுமே கொண்ட மண் சுவற்றில் ஓவியங்களை வரைய தொடங்கிய மாரிமுத்து வீட்டின் கூடத்தில் பறவைகைள், இயற்கை காட்சிகள், சமைக்கும் இடத்தில் காய்கறி மற்றும் பழங்கள், சாமி கும்பிடும் இடத்தில் இறை ஓவியங்கள் கொள்ளை புறத்தில் சுற்றுபுற தூய்மையை உணர்த்தும் ஓவியம் என நூற்க்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.
குடிசையில் பொருட்கள் வைத்துள்ள இடங்களை தவிர எஞ்சிய இடங்களில் எல்லாம் ஓவியமாகவே காட்சியளிக்கிறது. மாடி வீடுகளில் டைல்கற்களின் ஓவியத்தை கொண்டு அழகுபடுத்தும் அணைத்தையும் தன் குடிசை வீட்டில் இலைச்சாறு, விபூதி, சுண்ணாம்பு, காப்பிதூள் என கிடைக்கும் பொருட்களை கொண்டே உயிரோட்டம் உள்ள ஓவியங்களாக வரைந்து குடிசை வீட்டையும் மாளிகை போல் மாற்றியுள்ளார் சுட்டி மாணவர் மாரிமுத்து. ஒவியம் மட்டுமின்றி படிப்பிலும் முதல் மாணவர் என பெருமிதம் கொள்கின்றனர் வைத்தியநாதபுரம் அரசு உயர்நிளைப்பள்ளி ஆசிரியர்கள்.
விடுமுறை என்றாலே விளையாட்டு, தொலைக்காட்சி, செல்போன் விளையாட்டு என்ற நிலையை மாற்றி திறமைக்கும் முயற்ச்சிக்கும் வறுமை தடையல்ல என உணர்த்திய மாணவனை குருமானங்குடி கிராமமக்களும் பாராட்டி வருகின்றனர். குடிசைக்குள் ஓர் ஓவிய கண்காட்சி போல் தினமும் அப்பகுதி மக்கள் மாரிமுத்துவின் ஓவியத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.