ஆதமங்கலத்தில் மின்கம்பியில் மூங்கில் கம்புகள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது.
நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், ஆதமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜீவா நகரிலுள்ள ராமையா மகன் ராஜசேகருக்கு சொந்தமான சாரதா பண்ணையில் தேவையற்ற மூங்கில் மற்றும் கருவேல மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி இன்று நடைபெற்றது. அப்போது மேலே சென்று கொண்டிருந்த ஹச்டி லைனில் மூங்கில் கம்புகள் உரசியது. இதில் மூங்கில் கம்புகள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில் தீ மளமளவென அருகிலுள்ள தரிசு நிலத்திற்கு பரவியது.
மேலும் பலத்த காற்று அடித்ததால் தீயானது மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. உடனடியாக ஊராட்சி சார்பில் கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். இதையடுத்து சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில் அங்குள்ள மூங்கில், கருவேல மரம், ஆர்எஸ்பதி, சவுக்கு, வேம்பு, உள்ளிட்ட பல மரங்கள் தீயில் எரிந்து நாசனமாயின.
மேலும் இந்த தீ விபத்தில் வீடுகள் மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா சரவணன், கிராம நிர்வாக அலுவலர் எஸ்.தரண்யா, சிபிஎம் ஒன்றிய குழுவை சேர்ந்த நடராஜன், சிபிஎம் கிளைச் செயலாளர் சண்முகம், வார்டு உறுப்பினர் கல்பனா மற்றும் பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் உடனிருந்தனர்.