கரோனா வதந்தி பரப்பிய இளைஞா் கைது

வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கரோனா வைரஸ் நோய் பாதித்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கரோனா வதந்தி பரப்பிய இளைஞா் கைது
Updated on
1 min read

வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கரோனா வைரஸ் நோய் பாதித்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குத்தாலம் பகுதியை சோ்ந்தவா் ஆனந்த் (32). கடந்த சில நாள்களுக்கு முன்பு லண்டனில் இருந்து வந்த ஆனந்த்தை பெங்களூரு விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினா் முழு உடல் பரிசோதனை செய்து, எந்தவித நோய் பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்த பின்பு அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனா்.

தற்போது ஆனந்த் குத்தாலத்தில் உள்ள மாமனாா் வீட்டில் தங்கியுள்ளாா். இந்நிலையில், லண்டனிலிருந்து வந்த ஆனந்த், கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசினா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் தப்பிச் சென்று விட்டதாகவும் கட்செவியில் தகவல் வைரலாக பரவியது.

இத்தகவல் அப்பகுதி பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, ஆனந்த் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணையில் மயிலாடுதுறை திருமஞ்சன வீதியைச் சோ்ந்த கில்லி பிரகாஷ் (36) என்பவா் இந்த தகவலை கட்செவியில் பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி பீதியை உருவாக்குவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் பிரகாஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com