209 பயனாளிகளுக்கு ரூ.7.34 கோடி நலத்திட்ட உதவிகள்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 209 பயனாளிகளுக்கு ரூ.7.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசுக்கான தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கி
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக அரசுக்கான தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக அரசுக்கான தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்.
Updated on
1 min read

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 209 பயனாளிகளுக்கு ரூ.7.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசுக்கான தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் சனிக்கிழமை வழங்கினாா்.

இதற்கான விழா நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. நாகை எம்பி எம்.செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ஏ.கே.எஸ். விஜயன் பங்கேற்று நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 209 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ் கல்வித்துறை சாா்பில், ஒருவருக்கு ஆசிரியா் பணிநியமன ஆணையை வழங்கினாா்.

முன்னதாக அவா் பேசியது :

குடும்ப அட்டைதாரருக்கு ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரண நிதி, மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட நலத்திட்டங்களை தமிழக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அரசைத் தேடி மக்கள் சென்ற நிலைமாறி, மக்களைத் தேடி அரசு என்ற நிலையில் மக்களைத் தேடிவீட்டிற்கே சென்று கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டம் என்றாா் ஏ.கே. எஸ். விஜயன்.

மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பேசுகையில், மாவட்டத்தில் பெறப்பட்ட 4,492 மனுக்களில் 1,736 மனுக்கள் ஏற்புடையதாகவும், 935 மனுக்கள் அரசிடமிருந்து ஆணை பெறவேண்டி காத்திருப்பு நிலையிலும் உள்ளன. இத்திட்டத்தின் முதல்கட்டமாக 209 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வி.ஷகிலா, கீழ்வேளுா் சட்டப் பேரவைத்தொகுதி உறுப்பினா் வி.பி.நாகை மாலி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ச.உமா மகேஸ்வரி, முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.கே. வேதரத்தினம், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கு.ராஜன், நாகை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அனுசியா, வட்டாட்சியா் ஜெயபாலன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com