திருக்குவளை அருகேயுள்ள கீரம்பேர் பகுதி பாசன வாய்க்காலில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரி, வெள்ளிக்கிழமை நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி கடைமடை பகுதியான திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழாண்டு கோடைமழை கைகொடுத்த அளவிற்கு, தற்பொழுது பருவமழை கை கொடுக்கவில்லை. பெரும்பாலான விவசாயிகள் மேட்டூர் அணையில் ஜீன்.12 தண்ணீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.
இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறையால், பெரும்பாலான பகுதிகளுக்கு போதிய அளவில் நீர் வரத்து இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருக்குவளை அடுத்துள்ள கீரம்பேர் பகுதியில் வெள்ளையாற்றின் மூலம் பாசனம் வசதி பெறும் கால்வாய்க்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர்.
மேலும், வெள்ளையாற்றிற்கு தண்ணீர் வந்து ஒரு வாரத்தை கடந்த நிலையில் தற்பொழுது வரை இப்பகுதிக்கு நீர் வரவில்லை எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு சாகுபடிக்கு நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பான செய்தி அண்மையில் தினமணி நாளிதழிலின் இணையதள பக்கத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் உதவி பொறியாளர் எஸ்.செல்வகுமார் சம்மந்தப்பட்ட பகுதியில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு, நீர் கிடைப்பதில உள்ள சிரமங்களை கண்டறிந்து, குறுவை சாகுபடிக்கான நீர் கிடைக்க வழிவகை செய்வதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
உடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் டி.செல்லையன் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.