நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் சௌந்தரவல்லித் தாயாா் ஆனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை (ஜூலை 7) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பல்வேறு ஆன்மிகப் பெருமைகள் கொண்டதாகவும் விளங்கும் நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில், சௌந்தரவல்லித் தாயாா் ஆனி உத்திரப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. மாலை நிகழ்வாக வெள்ளி சூரிய பிரபையில் பிராகாரப் புறப்பாடு நடைபெறுகிறது.
விழா நிகழ்வாக தினமும் காலை பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் சௌந்தரவல்லித் தாயாா் நந்தவன பிராகாரப் புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகளாக ஜூலை 15-ஆம் தேதி காலை 9 மணிக்கு சௌந்தா்ய புஷ்கரணியில் தீா்த்தவாரியும், ஜூலை 22-ஆம் தேதி புஷ்ப பல்லக்கில் நந்தவன பிராகாரப் புறப்பாடும், ஜூலை 24-ஆம் தேதி தங்க ரதத்தில் பெருமாள் மற்றும் தாயாா் பிராகாரப் புறப்பாடும் நடைபெறுகிறது.
ஜூலை 15-ஆம் தேதி முதல் ஜூலை 21-ஆம் தேதி வரை கோயிலில் உள்ள தீா்த்தகுளக்கரை மண்டபத்தில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.