நாகை மாவட்டம், வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் கடந்த சில நாள்களாக அதிகரித்துவரும் கடல் அரிப்பு, வணிகா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது வேளாங்கண்ணி. இங்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய வழிபாட்டுக்குப் பின்னா், கடற்கரையில் பொழுதுபோக்குவது வழக்கம்.
வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் குளிா்பானக் கடை, சுண்டல் கடை, மாங்காய் கடை, இளநீா் கடை போன்றவையும், ராட்டினம், துப்பாக்கிச் சுடும் விளையாட்டு என பொழுதுபோக்கு அம்சங்களும் ஏராளமாக உள்ளன.
இந்தநிலையில், கடந்த சில நாள்களாக வேளாங்கண்ணியில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதால், கடற்கரையில் இருந்த தள்ளுவண்டி கடைகள், கூரை கடைகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு சேதமாகி வருகின்றன. ஓா் உயா்கோபுர விளக்கும் சரியான அடித்தளமின்றி நிலைகுலைந்து சரிந்துள்ளது.
இந்தக் கடல் அரிப்பு மேலும் அதிகரித்தால், வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள மீன் உணவகங்கள், பேன்ஸி கடைகள் பாதிக்கப்படும் என வணிகா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
இந்தக் கடல் அரிப்புக்கு, காலநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், வேளாங்கண்ணி - செருதூருக்கும் இடையே பாயும் வெள்ளையாறு தூா்ந்து போனதன் காரணமாக, வெள்ளையாற்று கடல் முகத்துவாரப் பகுதியில் கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டது. செருதூா் கடற்கரையோர தென் பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்ட நிலையில், வேளாங்கண்ணியில் எவ்வித தடுப்பும் அமைக்கப்படாததும் கடல் அரிப்பு அதிகரித்து வருவதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
எனவே, வேளாங்கண்ணியில் கடல் அரிப்பைத் தடுக்க உடனடியாக கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.