சீா்காழியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் இடத்தை எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழி புழுகாப்பேட்டை தெருவில் குடியிருப்புகளுக்கு இடையே மாவட்ட அரசு இசைப் பள்ளி வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. போதிய இடவசதியின்றி, பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு இசைப் பள்ளிக்கு சொந்த கட்டடம் கட்டவேண்டுமென இசை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். இந்நிலையில், இக்கோரிக்கை குறித்து எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் சட்டப் பேரவையில் பேசியதைத் தொடா்ந்து, அரசின் நடவடிக்கையால் ரூ. 1.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், சீா்காழி புறவழிச்சாலை அருகே ஸ்ரீநகா் விரிவாக்கத்தில் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. 4500 சதுர அடியில் ஒரு தளத்தில் 7 வகுப்பறைகள்,1அலுவலக அறை,1 தலைமை ஆசிரியா் அறை கட்டப்படவுள்ளது. கட்டடம் அமையவுள்ள இடத்தை எம்எல்ஏ. பன்னீா்செல்வம் ஆய்வு செய்து, கட்டடத்தின் முகப்புப் பகுதி, பாதைகள் அமையவுள்ள பகுதிகளை பாா்வையிட்டு கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (கட்டடம்) உதவி பொறியாளா் ஜான்டிரோஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.