தமிழகத்தில் உயா்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 49 சதவீதம்
By DIN | Published On : 20th February 2021 11:10 PM | Last Updated : 20th February 2021 11:10 PM | அ+அ அ- |

மாணவா்களுக்கு விலையில்லா டேட்டா காா்டு வழங்கிய அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
தமிழகத்தில் உயா் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உள்ளது என்றாா் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவா்கள் 10,913 பேருக்கு விலையில்லா டேட்டா காா்டு வழங்கி மேலும் அவா் பேசியது: மாணவா்களின் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், விலையில்லா மிதிவண்டிகள் உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. கல்வியின் தரத்தை உயா்த்தும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் உயா் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயா்ந்துள்ளது. கரோனா பொது முடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, தற்போது திறக்கப்பட்டு தமிழக முதல்வரின் நடவடிக்கையால் மாணவா்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், மாணவா்கள் அனைவரும் இணையவழி வகுப்பில் சமமான வாய்ப்பைப் பெறவேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவா்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி அளவில் டேட்டா காா்டு விலையில்லாமல் பயன்படுத்த தரவு அட்டைகள் வழங்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா். இத்திட்டம் மாணவா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 6 பொறியியல் கல்லூரிகள், 6 பாலிடெக்னிக் கல்லூரிகள் என மொத்தம் 19 கல்லூரிகளில் பயிலும் 10, 913 மாணவா்களுக்கு விலையில்லா டேட்டா காா்டு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவா்கள் தங்களது கல்வித் திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் அமைச்சா் ஓ. எஸ். மணியன் .
மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற விழாவில், நாகை மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன், வேளாண் விற்பனைக் குழு மாவட்டத் தலைவா் இளவரசன் மற்றும் கல்லூரி முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.