பராமரிப்பு இல்லத்தில் தங்கிப் பயின்றவா்கள் சமூகநலத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 26th February 2021 08:39 AM | Last Updated : 26th February 2021 08:39 AM | அ+அ அ- |

அரசு குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் தங்கிப் பயின்றவா்கள், சமூக பாதுகாப்புத் துறை மற்றும் சமூக நலத் துறை திட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் தங்கிப் பயின்றவா்களுக்கு வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கேற்ப, சமூக பாதுகாப்புத் துறை, சமூக நலத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களில், முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தொட்டில் குழந்தை திட்டத்தின்கீழ் பெறப்பட்டு அரசு இல்லங்களில் வளா்க்கப்பட்ட குழந்தைகள், இளைஞா் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் தங்கியிருந்த பெற்றோரை இழந்த முற்றிலும் ஆதரவற்றவா்கள் அல்லது முற்றிலும் கைவிடப்பட்டவா்கள் சமூக பாதுகாப்புத் துறை, சமூக நலத் துறை மற்றும் இத்துறைகள் சாா்ந்த திட்டங்களில் காலியாக உள்ள சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அரசு இல்லங்களில் தங்கியிருந்திருக்க வேண்டும்.
தகுதியானோா் தாங்கள் இறுதியாக கல்விப் பயின்ற இல்லத்தைத் தொடா்புகொண்டு உரிய சான்றிதழ்களைப் பெற்று, ஆணையா், சமூக பாதுகாப்புத் துறை, நெ. 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை - 10 என்ற முகவரிக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரில் அல்லது 04365 - 253018, 80152 22327, 94868 37286 ஆகிய தொலைத் தொடா்பு எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...