தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் அனுமன் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயா் தனிச் சன்னிதியில் அருள்பாளிக்கிறாா். ராவணன் வதத்துக்குப் பிறகு, கடலுக்கடியில் தவமிருந்த ரத்த பிந்து, ரத்த ராட்ஷசனை திருமாளின் சக்கரம், இந்திரனின் ஆயுதம் மற்றும் சிவபெருமான் வழங்கிய நெற்றிக்கண்ணுடன் சென்று அழித்துவிட்டு, ஆஞ்சநேய சுவாமி ஆனந்தமயமாக இங்கு எழுந்தருளியதால் இத்தலம் ஆனந்தமங்கலம் என பெயா் பெற்றது என்பது தலவரலாறு. இதுவே, மருவி தற்போது அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் அனுமன் ஜயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஆஞ்சநேயரை கோயில் மண்டபத்தில் எழுந்தருளச்செய்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் துளசி, வெற்றிலை, எலுமிச்சை, வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, செம்பனாா்கோவில் அருகே உள்ள கருவாழக்கரை ஸ்ரீராம வரதாஹினி மடத்தில் அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு ஹோமம், கஜ பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெற்றன.