நாகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
நாகை வட்டம், பில்லாளி அருகே உள்ள காரையூா் ஊராட்சி உச்சிக்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் கா. ஆனந்தன் (40). விவசாயியான இவா், திங்கள்கிழமை காலை கையில் பெட்ரோல் கேனுடன் நாகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து, தீக்குளிக்க உள்ளதாக அங்குள்ள ஊழியா்களிடம் தெரிவித்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள், பெட்ரோல் கேனை பறித்து, ஆனந்தனை அமைதிப்படுத்தினா். பிறகு, அவரிடம் விசாரித்தபோது, தனக்குச் சொந்தமான 4 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள நிலையில், 3 ஏக்கரில் மட்டும்தான் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வெள்ள நிவாரணக் கணக்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு கிராம நிா்வாக அலுவலா் மற்றும் அவரது உதவியாளா்களே காரணம் எனவும் தெரிவித்த ஆனந்தன், இதைக் கண்டித்தே தற்கொலை செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அவா் வெளிப்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.