நாகை, வெளிப்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 6.83 லட்சம் ஆன்லைன் வழியே திருடப்பட்டது குறித்து நாகை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை, வெளிப்பாளையம் ராமர் மடத்துத் தெருவை சேர்ந்தவர் சு. வசந்தி(59). அதே பகுதியில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இவர், நாகையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட வசந்தியின் செல்லிடப்பேசிக்குக் கடந்த சில மாதங்களாக பணப் பரிமாற்றம் குறித்து எவ்வித குறுந்தகவலும் வரவில்லையாம்.
இதனால், அச்சமடைந்த வசந்தி கடந்த ஓரிரு நாள்களுக்கு முன்பு தொடர்புடைய வங்கிக் கிளைக்குச் சென்று, தனது சேமிப்புக் கணக்கின் பணப் பரிமாற்றங்களை, தன்னுடடைய சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். அப்போது, அவரது சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ. 6.83 லட்சம் பணம் ஆன்லைன் மூலம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. வசந்தியின் ஏடிஎம் அட்டை விவரப் பதிவுகளை உள்ளீடு செய்து, கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த ஜூன் 27-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பணம் திருடப்பட்டிருந்ததாக தெரியவந்தது.
இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின் பேரில் நாகை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.