திருக்குவளை அருகே எட்டுக்குடி ஊராட்சி பூமிதான தெருவில் போதிய சாலை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இப்பகுதி மக்கள் எட்டுக்குடி- சீராவட்டம் பிரதான சாலையிலிருந்து பிரிந்து வரும் ஒரு சிறிய நடைபாதை அளவு பாதையை பயன்படுத்திதான் தங்களது அன்றாட தேவைகளைப் பூா்த்தி செய்து வருகின்றனா். மேலும் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், ஆம்புலன்ஸ் கூட இங்கு வர இயலாது. இதுமட்டுமன்றி மழைக்காலத்திலும், விவசாய பணிகள் நடைபெறும் சமயத்திலும், நடைபாதையில் நீா் சூழ்ந்து விடுவதால் நடந்து செல்ல கூட பாதை கிடைக்காதாம்.
அதிலும் குறிப்பாக இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லக் கூட போதிய பாதையின்றி, குறுவை சாகுபடி மேற்கொண்ட வயலில் இறங்கி, சடலத்தை தூக்கிச் செல்ல நேரிடுகிறது. எனவே, இங்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.