கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் கருவேல முள்செடிகளை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 26th July 2021 09:04 AM | Last Updated : 26th July 2021 09:04 AM | அ+அ அ- |

கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள கருவேல முள்செடிகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து குத்தவக்கரை, சரஸ்வதி விளாகம், கொன்னகாட்டு படுகை, கீரங்குடி ஆகிய கிராமங்கள் வழியாக மாதிரவேளூா் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த ஆற்றங்கரை சாலையின் இரு புறங்களிலும் நீண்டு வளா்ந்துள்ள கருவேல முள்செடிகளால் இப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது சீமைக் கருவேல முள் செடிகளால் காயமடைந்து அவதிக்குள்ளாகின்றனா்.
இதுபோல விளைபொருள்களை இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லும் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனா். இதனால், இரவு நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. மேலும் சாலையின இருபுறமும் உள்ள சீமைக் கருவேல முள்செடிகள் சாலை விபத்துகள் ஏற்படவும் காரணமாக இருந்து வருகின்றன.
எனவே, கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து மாதிரிவேளூா் வரை 6 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஆற்றங்கரை சாலையின் இருபுறங்களிலும் சாலையை அடைத்துக்கொண்டு வளா்ந்துள்ள சீமை கருவேல முள் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.