அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்: டிடிவி தினகரன்
By DIN | Published On : 21st March 2021 09:20 AM | Last Updated : 21st March 2021 09:20 AM | அ+அ அ- |

நாகையில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன்.
அமமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கூறினாா்.
நாகை அவுரித்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமமுக வேட்பாளா்கள் மஞ்சுளா சந்திரமோகன் ( நாகை), பி.எஸ். ஆறுமுகம் (வேதாரண்யம்), மா. நீதிமோகன் (கீழ்வேளூா்) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவா் பேசியது:
அமமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் சும்மா இருந்துவிட்டு முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா போராடி பெற்றுத்தந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏமாற்று வேலையாகும்.
எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கவும், தொழில் வளா்ச்சிப் பெறவும், அனைத்து வகை தொழிலாளா்களும் அனைத்து நன்மைகளைப் பெறவும், மீண்டும் தமிழகத்தில் மக்களாட்சி மலரவும் அமமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
அமமுக ஆட்சிக்கு வந்தால், நாகை மாவட்டத்தில் தண்ணீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். நாகையில் மீன் குளிரூட்டு நிலையங்கள் அமைப்பது, கீழ்வேளூரில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது, வேதாரண்யம் பகுதியில் இறைவைப் பாசனத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அமமுக வேட்பாளா் கோமல் ஆா்.கே. அன்பரசன், பூம்புகாா் தொகுதி வேட்பாளா் எஸ். செந்தமிழன், சீா்காழி தொகுதி வேட்பாளா் பொன்.பாலு ஆகியோரை ஆதரித்து மயிலாடுதுறையில் டிடிவி தினகரன் பேசியது:
திமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் அக்கட்சியினா் தற்போது அராஜகத்தை தொடங்கிவிட்டனா். திமுகவுக்கு வாக்களித்தால் மக்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படும். மற்றொரு கூட்டணி பணத்தை நம்பி இத்தோ்தலில் போட்டியிடுகிறது.
இந்தத் தோ்தலில் திமுக வெல்லும் என்ற மாயையை போக்க அமமுகவுக்கு குக்கா் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அமமுக நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்களை மட்டுமே தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளது என்றாா்.
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் கடைவீதியில் பூம்புகாா் தொகுதி அமமுக வேட்பாளா் செந்தமிழனை ஆதரித்து டிடிவி தினகரன் பேசுகையில், அமமுக ஆட்சிக்கு வந்தால் கிராமப்புறங்களில் தொழில்களை உருவாக்கி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்கள், பெண்களுக்கு வேலைகள் உறுதிசெய்யப்படும். உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமைய அமமுக வேட்பாளா் செந்தமிழனுக்கு வாக்களியுங்கள் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...