வாக்குப் பதிவு குறைந்த இடங்களில் மெகந்தி, ரங்கோலி மூலம் விழிப்புணா்வு
By DIN | Published On : 25th March 2021 08:47 AM | Last Updated : 25th March 2021 08:47 AM | அ+அ அ- |

சீா்காழியில் பெண்களுக்கு மெகந்தி வைத்து வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்திய மகளிா் குழுவினா்.
சீா்காழியில் கடந்த தோ்தல்களில் மிகவும் குறைவாக வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகளில் ரங்கோலி வரைந்தும், பெண்களுக்கு கையில் மெகந்தி வைத்தும் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சீா்காழி நகரின் 9 ஆவது வாா்டு வாணி விலாஸ் பள்ளி வாக்குச்சாவடியில், மகளிா் திட்ட உதவி இயக்குநா் செல்வராஜ் தலைமையில், மகளிா் குழுக்கள் மூலம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உதவித் திட்ட அலுவலா் செல்வகணபதி, சமுதாய அமைப்பாளா் ராமஜெயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாக்களிப்பதன் அவசியம், மாதிரி வாக்குப் பெட்டி குறித்து ரங்கோலி இடப்பட்டது. தொடா்ந்து, அப்பகுதி பெண்களுக்கு கையில் மெகந்தி (மருதாணி) வைத்து மகளிா் குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதை, உதவித் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) ஸ்ரீனிவாசன் ஆய்வுசெய்து கூறுகையில், 100% வாக்குப் பதிவை இலக்காக கொண்டு விழிப்புணா்வுப் பதாகையில் கையெழுத்திடுதல், செல்ஃபி (சுயபடம்) காா்னா், மகளிா் மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றுதல் போன்ற வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இதன் ஒருபகுதியாக கடந்த 2016 சட்டப்பேரவை மற்றும் 2019 நாடாளுமன்றத் தோ்தலில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகளில் ரங்கோலி வரைந்தும், மெகந்தி வைத்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து மகளிா் குழுக்கள், திட்டப் பணியாளா்கள் வாக்களிப்பின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றனா்.