உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து உபவாசம் இருந்த 40 நாள்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் ஜெருசலேம் நகருக்கு கழுதையின் மேல் அமர்ந்து சென்றார் என்பதும்,அப்போது அங்கு குழுமியிருந்த மக்கள் பனை ஓலைகளை கையில் பிடித்தப்படி வாழ்த்துப் பாடல்களைப் பாடி வரவேற்றனர் என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் குருத்தோலை ஞாயிறு அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, கீழை நாடுகளின் லூர்து என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராயலத்தில்ஆண்டுதோறும் ஈஸ்டர் திருநாள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இதன்படி ஈஸ்டர் திருநாள் சிறப்பு வழிபாடுகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் மற்றும் சிறப்புப் பிரார்த்தனைகள் வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு பவனி ஊர்வலத்தை பேராலய அதிபர் எம்ஏஎம் பிரபாகர் அடிகளார் தொடங்கி வைத்தார்.
பேராலய முகப்பில் தொடங்கிய குருத்தோலை ஞாயிறு ஊர்வலமானது பேராலயத்தை சுற்றியுள்ள வீதிகள் வழியாகச் சென்று கலையரங்கில் நிறைவடைந்தது. இதில் திரளானோர் பங்கேற்று குருத்தோலைகளில் கைகளில் பிடித்தப்படி ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி,கொங்கணி மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மறையுரை மற்றும் மன்றாட்டுகள் நடைபெற்றன. பங்கு தந்தையர்கள், உதவிப் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு நடைப்பயணமாக வந்திருந்த பக்தர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.