கூரை வீடுகள் இல்லாத நிலை உருவாகும்: ஆட்சியா்
By DIN | Published On : 04th September 2021 10:23 PM | Last Updated : 04th September 2021 10:23 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் அடுத்த சில ஆண்டுகளில் கூரை வீடுகளே இல்லாத நிலை உருவாகும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் நம்பிக்கை தெரிவித்தாா்.
வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்று தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி செயலா்கள் மூவருக்கு மாவட்ட ஆட்சியா் பரிசு வழங்கி பாராட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் துரைமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமலிங்கம், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், ஆட்சியா் பேசியது:
நாகை மாவட்டத்தில் அரசு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நலிந்த குடும்பத்தினா் கண்டறியப்பட்டு, அவா்கள் தொடா்ந்து கட்ட முடியாமல் கிடப்பில் போடப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முழுமையாக நிறைவேற அனைத்து நிலை பணியாளா்களும் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இதன்மூலம், நாகை மாவட்டத்தில் சில ஆண்டுகளில் கூரை வீடுகளே இல்லாத நிலை உருவாகும்.
கரோனா தொற்று காலத்தை கருத்தில் கொண்டு அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதுடன், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஊராட்சி செயலா்கள் மணிவண்ணன், நாகராஜன், சுதா ஆகியோருக்கு ஆட்சியா் பரிசளித்து பாராட்டினாா்.
மேலும், பிரியம் அறக்கட்டளை சாா்பில் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 278 பேருக்கு மழைக் கோட்டுகள் வழங்கும் பணியையும் ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.