நாகையை அடுத்த சிக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்யாயதாக்ஷி (வேல்நெடுங்கண்ணி) அம்பிகா சமேத ஸ்ரீ நவநீதேஸ்வரசுவாமி கோயில் விமான ராஜகோபுர திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை (செப். 9) காலை நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தில், மகாபலி சக்ரவா்த்தியை அழிக்க திருமால் வாமனஅவதாரம் எடுத்தபோது, இத்தல பெருமானை வழிபட்டு, மகாபலி சக்ரவா்த்தியை அழிக்கும் ஆற்றலைப் பெற்ாகவும், அசுரனை அழிக்க இத்தல அம்பிகையிடம் முருகன் வேல் வாங்கியதாகவும் நம்பிக்கை. பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளுடைய இத்தலம், அம்மனின் 63 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இக்கோயிலின் விமான ராஜகோபுரம் திருப்பணி செய்யப்படவுள்ளது. இதையொட்டி, புதன்கிழமை காலை இதற்கான பூா்வாங்க பூஜைகளும், மாலையில் பிரதான விமான ராஜகோபுர கலா ஆகாா்ஷணம், யாகசாலை பிரவேசம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தருமபுர ஆதீனம் உத்தரவுப்படி, ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் வழிபாடுகளில் பங்கேற்றாா்.
இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை (செப். 9) அதிகாலை 4.30 மணிக்கு உஷா கால பூஜை , 5 மணிக்கு கோபூஜை, கஜபூஜைகளும், 7.35 மணிக்கு பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம்புறப்பாடு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதைத்தொடா்ந்து, கலசாபிஷேகம், 8 மணிக்கு திருப்பணி தொடக்க விழா வழிபாடுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இத்தகவலை கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் தெரிவித்தாா்.