நாகப்பட்டினம்: கீழையூர் அருகே இறையான்குடியில் காவல் துறை சார்பில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் படிப்பகத்தை நாகை மாவட்ட எஸ்.பி.ஜவஹர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள இறையான்குடியில் கிராம மக்கள் ஒன்றிணைந்து சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழித்தனர். இந்நிலையில் கிராம மக்களை பாராட்டி நாகை எஸ்.பி. மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார். அப்போது, பள்ளி மாணவர்களின் நலன் கருதி பழுதடைந்த படிப்பகத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கல்வி மற்றும் அறிவுசார்ந்த இக்கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காவல்துறையினர் உடனடியாக படிப்பகத்தை சீரமைத்து புத்தகளை பரிசாக அளித்தனர். இந்நிலையில் அதன் திறப்பு விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவஹர் பங்கேற்று படிபகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்வில் நூலகத்தின் அவசியம் மற்றும் மாணவர்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து பேசினார். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கினார். மக்களின் கோரிக்கையை ஏற்று படிப்பகத்தை காவல் துறையினரே சீரமைத்து கொடுத்த சம்பவம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.சேகர் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் லென்சோயாசிவபாதம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் எஸ்.அன்பழகன் வரவேற்பு வழங்கினார். இதில் நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் கீதா, கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் சரவணன், பள்ளி ஆசிரியர் மா.முருகையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இறுதியாக கிராம நிர்வாக அலுவலர் கே.பாலமுருகன் நன்றியுரை வழங்கினார்.