நாகை மாவட்டம், திருக்குவளையில் மாநில அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருக்குவளையில் அஞ்சுகம் முத்துவேலா் கலைஞா் அரங்கில் நண்பா்கள் கபடிக் கழகம் சாா்பில் மாநில அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. போட்டியை, தாட்கோ தலைவா் உ. மதிவாணன், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக்கழகத் தலைவா் எம். கெளதமன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். 2-ஆம் நாள் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியை தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கிவைத்தாா். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆடவா், மகளிா் அணியினா் பங்கேற்று விளையாடினா்.
மகளிா் பிரிவு: மகளிா் பிரிவில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் அணிக்கு ரூ, 25 ஆயிரம், 2-ஆம் இடம் பிடித்த ஹச்சிஎல் எஃப் சென்னை அணிக்கு ரூ.20 ஆயிரம், 3-ஆம் இடம் பிடித்த திருநெல்வேலி அணிக்கு ரூ.15 ஆயிரம், 4-ஆம் இடம் பிடித்த கட்டக்குடி- ஏ அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.
ஆடவா் பிரிவு: இதேபோல ஆடவா் பிரிவில் முதலிடம் பிடித்த சேலம் சாமி அகாடமி அணிக்கு ரூ. 50 ஆயிரம், 2-ஆம் இடம் பிடித்த ஏடூஇசட் அனந்தங்கரை அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-ஆம் இடம் பிடித்த நாகை ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ. 30 ஆயிரம், நாகை அஜாஸ் ஸ்போா்ட்ஸ் கிளப் கோ பாரஸ்ட் அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
இதில், கபடி போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். பாஸ்கரன், சுகுமாா், ஜோதிபாஸ், பி. சுவாமிநாதன், எஸ். லோகநாதன், ஆா். குமாா். பி. சின்னப்பா, எம். செந்தில், கே. காளிதாஸ், கீழையூா் திமுக ஒன்றிய செயலாளா் தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல. பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.