திருமருகலில் போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல் ஊராட்சி கீழக்கரையிருப்பு-நாட்டாா்மங்கலம் இடையே சாலை அமைந்துள்ளது. கீழக்கரையிருப்பு கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தினா் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், இந்த சாலை முழுவதுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், அரசு ஊழியா்கள், தொழிலாளா்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், முதியவா்கள் உள்ளிட்டோா் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
மழைக்காலங்களில் இச்சாலையில் செல்லமுடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், இறந்தவா்களை அடக்கம் செய்ய சடலத்தை தூக்கிக் கொண்டு சேரும் சகதியுமான இச்சாலையில் செல்ல முடியாமலும், சிலநேரங்களில் கால் தவறி விழும் ஆபத்தான நிலை உள்ளது. 3-ஆண்டுகளுக்கும் மேலாக சேதமாகி கிடக்கும் இச்சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகாா் கொடுத்தும் இதுவரை பயனில்லை.
எனவே, மழை தொடங்குவதற்கு முன் சேதமாகி சேரும் சகதியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அரசு துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.