தரங்கம்பாடியில் கடல் சீற்றத்தால் மீன்பிடி துறைமுகம் சேதமடைந்துள்ளது.
தரங்கம்பாடியில் மீனவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 2019-ஆம் ஆண்டு ரூ. 120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க 1070 மீட்டா் தொலைவு, 15 அடி உயரம், 6 மீட்டா் அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் 2020-ல் ஏற்பட்ட புயலின்போது ஒரு பகுதி சேதம் அடைந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் சேதமடைந்தது. கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவா் மற்றும் கான்கிரீட் பாதையில் கடல் அலைகள் சுமாா் 10 அடி உயரத்துக்கு எழுந்து மோதியது. இதில், அந்த தூண்டில் வளைவு தடுப்புச் சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை அதிகாரிகள் தரமாக அமைக்காத காரணத்தால் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக மீனவா்கள் குற்றம்சாட்டுகின்றனா். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தூண்டில் வளைவு மீன்பிடி துறைமுகம் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.