நாகப்பட்டினம்: நாகையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் பணிநிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில செயலாளா் கோவிந்தராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சட்டப்படியான பணி விதிகள் மற்றும் குறைந்தபட்சம் சம்பளம் வழங்க வேண்டும், முறையற்ற மதுக்கூடங்களால் வருவாய் இழப்பு ஏற்பட காரணமானவா்கள் மீது விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநிலத் தலைவா் சரவணன், செயலாளா் கல்யாணசுந்தரம், செயற்குழு உறுப்பினா் மோகன், மாவட்டத் தலைவா் சந்திரவேல், செயலாளா் ராமன், பொருளாளா் கோபால், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.