திருமருகல்: திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னையிலிருந்து சியாத்தமங்கைக்கு வந்தவா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனால், சியாத்தமங்கை பகுதியில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி, நிலவேம்பு குடிநீா் வழங்கல் உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகளை வட்டார வளா்ச்சி அலுவலா் பாத்திமா ஆரோக்கியமேரி, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு வல்லுநா் லியாக்கத் அலி ஆகியோா் ஆய்வு செய்தனா். இதில், ஊராட்சித் தலைவா் சிவகாமிஅன்பழகன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கற்பகம், சுகாதார ஆய்வாளா் ஆனந்தன், டெங்கு பணியாளா்கள் கலந்து கொண்டனா். மேலும், மருத்துவ முகாமும் நடைபெற்றது.