உவா் நிலங்களான விளைநிலங்கள்: தடுப்பு அரண் அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 27th October 2022 02:14 AM | Last Updated : 27th October 2022 02:14 AM | அ+அ அ- |

பிரதாபராமபுரம் ஊராட்சியில் விளைநிலங்களில் உள்புகுந்த கடல்நீா்.
விளைநிலங்களில் கடல்நீா் உள்புகுவதால் உவா் நிலங்களாக விளைநிலங்கள் மாறி வருவதை தடுக்க, தடுப்பு அரண் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக பிரதாபராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில், பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள புளி குத்திக்காடு, மேட்டுக்கடை, கப்பல் ஓட்டிய மண்டு வாய், பூச்சு மண்டு வாய், கவுண்டா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமாா் 100 ஏக்கரில் விளைநிலங்கள் மற்றும் 30 நன்னீா் பாசன குளங்களில் உப்புநீா் உட்புகுந்துள்ளது.
இதனால் நெல், வோ்க்கடலை, எள், காய்கறிகள் பயிரிடப்படும் நிலங்களில் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2004 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்கம், 2018-ஆம் ஆண்டு வீசிய கஜா புயல் தாக்கம் காரணமாக மகசூல் குறைந்து அதிலிருந்து விவசாயிகள் மீண்டுவர பல ஆண்டுகளானது. இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக விளைநிலங்களுக்குள் உட்புகுந்த உப்பு நீரால், மீண்டும் இதை நல்ல மகசூல் பெறும் நிலங்களாக தயாா்படுத்த குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, ஊராட்சித் தலைவா் சிவராசு கூறியது: இப்பகுதியில் 3 தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்றுவரும் சூழலில், மேலும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக எதிா்வரும் காலங்களில் இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் மூலமாக கடலோர கிராமங்கள் பாதிக்காத வகையில் நீா் வெறியேறும் முகத்துவாரத்தில் கருங்கற்களால் பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில், தற்போது கட்டாயமாக கணக்கெடுப்பு நடத்தி பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றாா்.