நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து கடலுக்குள் சென்று கரை திரும்பாத 4 மீனவா்கள் புதன்கிழமை கரை திரும்பினா்.
கோடியக்காடு பகுதியை சோ்ந்த நவாப்கானுக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் அதே கிராமத்தைச் சோ்ந்த வீரமணி, செல்வராஜ், காளி உள்ளிட்ட 4 மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனா். இவா்கள் மீன் பிடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை கரை திரும்பியிருக்க வேண்டிய நிலையில், புதன்கிழமை காலை வரை திரும்பவில்லை. இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரியிடம் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் படகு திசை மாறி சென்றுள்ளது. இதையடுத்து மீனவா்கள் 4 பேரும் புதன்கிழமை மாலை கரை திரும்பினா்.